வேடிக்கை மனிதர்கள்
வாசு! வாசு! கூப்பிட்டுக் கொண்டே வந்தான் ஹேமந்த்.
விடாது ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுவை தோளைத் தட்டி,
என்னடா ! கூப்பிட்டு கூப்பிட்டு உன்னைத் தவிர எல்லோரும் திரும்பி பார்க்கறாங்க. உனக்கு எங்க யோசனை? வா! கேண்டீன் போய் சாப்பிட்டு விட்டு வரலாம் .
ஹேமந்த்! அங்க பார்த்தியா? இரண்டு பேர் சாமியார் மாதிரி..அவங்களைத் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன் என அவன் கை காட்டின திக்கைப் பார்த்தான் ஹேமந்த்.
அவனுக்கும் இது என்ன இங்கு என இருந்தது.
அவர்கள் வேலை பார்ப்பது கப்பல் கட்டுமான கம்பெனியில். கட்டுமானம் ஆதலால் கட்டுப்பாடுகளும் அதிகம். அனைவரும் ஆரஞ்சு வண்ண முழு சட்டையில் சீருடை அணிந்திருந்தனர். உள்ளே எந்த நபருக்கும் அனுமதி கிடையாது. அப்படி இருக்க கம்பெனி வாசலில் இது என்ன ? இவர்கள் சாமியார்களா? கேட்டான் ஹேமந்த்.
நானும் அதைத் தாண்டா யோசித்துக் கொண்டு இருக்கிறேன். ஏதாவது யோகப் பயிற்சியோ? - இது வாசு.
டேய்! அப்படின்னா அந்த ஆளைப் பிடிக்கணும்டா. நான் கூட யோகா கத்துக்கணும்
அடப் போடா! வந்துட்டான் யோகா கத்துக்க. யோகா கிளாஸ்க்கு போய் தூங்குனவன் தானே நீ.
வாசு ! இது டூ....மச்! நான் முதலிலெல்லாம் தூங்கல. கடைசியில் படுத்துண்டே பண்ணும் போது தான் தூங்கிட்டேன். அப்புறம் மாஸ்டர் வந்து தட்டி எழுப்பினதும் அந்த பக்கமே போகலை.
இவங்க யாருன்னு கேட்டு போயிடலாம்டா.
ஹேமந்த்! கீழே உள்ளவர் உட்கார்ந்திருக்கார். மேலே இருக்கறவர் மிதந்துண்டு இருக்கார்.. எப்படிடா? ஏதாவது மாயமா? மந்திரமா?
வாடா ! கிட்ட போய் பார்க்கலாம். அப்படியே கேண்டினில் காப்பி வாங்கிக் கொண்டே கிட்ட போனார்கள் இருவரும்.
எங்கடா மிதக்குறார். ? ஒரு கம்பு இருக்கு பாரு. உள்ளே இருந்து பார்க்கும் போது தெரியலை.
இவ்வளவு பேரு சுத்தி சத்தம் போடறோம். இந்த இரண்டு சாமிகளுக்கும் தியானம் கலையலை. ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா இருப்பாங்க போல.
ஆமாடா! இதே நம்ம ஊரா இருந்தா இந்நேரம் அருள்வாக்கு கேட்டு பக்கத்து ஊர் வரை ஜனங்கள் நின்னுருப்பாங்க. இங்க என்னடான்னா யோகமும், தவமும் சல்லிசா போச்சே. எல்லோரும் சும்மா நிற்கறாங்க ..சலித்துக் கொண்டான் வாசு.
போனாப் போறாங்கடா! நாம எங்க இருந்தாலும் நம்ம ஊர் பெருமையை காப்பத்தணும்டா.
வா! இவங்க இப்படி எதுக்கும் அசராம ஆழ் தியானத்துல இருக்காங்கன்னா நிச்சயம் பெரிய சாமிகளா இருக்கணும். கும்பிட்டா நமக்கு நல்லதே நடக்கும் என ஹேமந்த், வாசுவுடன் சாஷ்டாங்கமா விழுந்தான்.
சுற்றி இருந்தவர்களின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்த வாசு சுதாரிப்பதற்குள்..
கீழே அமர்ந்து இருக்கும் சாமியார் நகர்ந்தார். அப்படியும் அந்த கம்பும் அதன் மேல் உள்ள சாமியாரும் விழ வில்லை. கம்பு தனியா நிலத்தில் ஊன்றப் பட்டிருந்தது. அதன் மேல் உட்காரும் பலகை. அதில் தான் மேலே உள்ளவர் அமர்ந்து இருந்தார். கீழே உள்ளவர் நகர்ந்ததும் மேலே உள்ளவரும் மெதுவாக கால் வைத்து இறங்கினார்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, மேலாளர் முன்னாடி வந்து மைக்கில் பேச ஆரம்பித்தார்...
நமது கம்பெனியின் புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ள இரண்டடுக்கு கட்டுமானப் பிரிவுக்கு உங்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். நிலையான கட்டுமானம், எந்த நிலையிலும் உறுதி சிதறாத கட்டுமானம் இவையே நமது தாரக மந்திரம்.
அதற்கான விளம்பரமாக இவ்விருவர் நம் கம்பெனி உடைவண்ணம் அணிந்து எதற்கும் அசையாது காலை முதல் மாலை வரை உட்கார்ந்து இருந்தார்கள்.
நிலைப்புக்கும் உறுதிக்கும் எடுத்துக்காட்டாக இருந்த இவர்களுக்கு கம்பெனியின் சார்பாக இந்த நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்கிறோம்.
கூட்டம் தட்டிய கைதட்டலில் கொஞ்சம் வாசு, ஹேமந்த் மீதும் விழுந்தது.
ஆசாமியை சாமியாக்கி காலில் விழுந்தீங்களாடா? சிரிப்பலை பொங்கிற்று.

No comments:
Post a Comment