Saturday, 10 September 2016

துறவு



                           துறவு

 கூறாமல் துறவறம் கொள்ளும் நிலையில் இருந்தான் அவன், ராஜமாணிக்கம்.

அப்பா! நீ ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லைப்பா! எனக்கு ராகுல் வைச்சிருக்கிற கிரிக்கெட் செட் வேணும்ன்னு சொல்லி 2 நாளாச்சு. இன்னும் வாங்கிண்டு வர! - இது பெரியவன் விஸ்வா

அப்பா! நீ என்ன தான் பண்றே! வெத்து வேட்டுன்னு அம்மா சொல்றது சரியா தான் இருக்கு. எப்பவும் முழிச்சிண்டே உட்கார்ந்திருக்கியே , தண்டம் - இது பெண் வித்யா

காதில் கேட்டவாறே பேப்பரை மேய்ந்து கொண்டிருந்தான் ராஜமாணிக்கம். இந்த குட்டிச் சாத்தான்களுக்கு பதில் சொல்லி என்னவாகப் போகுது. இதுகளை ஆட்டி வைக்கிற பெரிய சாத்தான் இருக்கே , அதான் என் தர்ம பத்தினி நிஷா அவளை சொல்லணும்.

எப்போதும் ஏக வசனம். ஏய், வா, போ தான். கணவன்ங்கற மரியாதை கூட கிடையாது. எல்லாவற்றிற்கும் குற்றம் கண்டு பிடித்து லபோ திபோ என்பாள். புன்சிரிப்போ, இன்சொல்லோ மருந்துக்குக் கூட கிடையாது. மனிதர்களை அனுசரித்துப் போகும் குணம் அறவே இல்லை.

இவனும் பொறுத்துத் தான் கிடக்கிறான். தாய் சொல்லி விட்டு போயிருந்தாள்
கண்ணப்பா! வாய்ச்சவள் சரியில்லை தான். அதற்காக நீயும் பதிலுக்கு பதில் பேசினால் சண்டை முத்தி தெருவுக்கு வரும். அதுக்கு அமைதியாய் அவளை உன் மனசுக்குள் திட்டு , விட்டுக் கொடுத்துப் போ என்று .

பத்ரகாளியாய் வந்து நின்றாள் நிஷா!

வாஷிங்மிஷின்ல துணி கிடக்கு! போய் உலர்த்திட்டு வாங்கன்னேன். இன்னும் போகலை நீ. காலேல எழுந்திரிச்சமா, கூட மாட வேலை பார்த்தோமான்னு இல்லாம பேப்பர்ல என்ன புல் மேய்ச்சுகிட்டு இருக்க.

வரேன்ம்மா! வாயை மூடிக் கொண்டு வாளியை எடுத்துக் கொண்டு போனான்.

இப்படி இருக்கும் ராஜமாணிக்கம் ஆபிஸில் டெர்ரர் மாணிக்கம். அவனை கண்டாலே எல்லோரும் நடுங்குவர். எல்லா பேப்பரும் சரியான நேரத்துக்கு முடிக்கப் பட்டிருக்க வேண்டும். சரியா டேலி ஆகலேன்னா போச்சு அந்த அக்கவுண்ட் பண்ணினவன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிடுவார். வேலையில் கறார். ராஜமாணிக்கம் பிரிவா ? அப்போ தப்பே கண்டு பிடிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இருந்தது அவர் பிரிவு.

அதனாலயே அவருக்கு ரொம்ப நட்பும் இல்லை. அவ்வப்போது கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் மோட்டுவளையை பார்த்துக் கொண்டோ இல்லை கண்களை மூடிக் கொண்டோ இருக்கையில் சாய்ந்து கிடப்பார்.

துணி உலர்த்திட்டு வந்தா அடுத்து பிள்ளைங்களை பார்க்க வேண்டியது தானே. உனக்கு தானே பெத்தேன். வந்து கிளப்பு ஸ்கூலுக்கு என்றாள் நிஷா.

அவள் அப்படித்தான். அவளுக்கு போதிக்கப் பட்டிருந்த போதனை அப்படி . புருஷனை கைக்குள்ளேயே வைச்சுக்கணும்ன்னா இரவில் நீ வேலைக்காரியாகவும் பகலில் அவன் வேலைக்காரனாகவும் இருக்கணும் என அவள் வீட்டில் போதித்திருந்தனர். அவளுக்கு எப்பொழுதும் அவன் வேலைக்காரனே. நிமிஷம் சும்மா விட மாட்டாள். இதற்காக ஆபீஸிலேயா உட்கார முடியும்.

பிள்ளைகளும் அதை பார்த்து அவர்களின் அப்பாவை மதிக்க கற்றுக் கொள்ள வில்லை என்பது தான் பரிதாபம்.

வீட்டுக்குள் பெருக்குவது, துடைப்பது, துணி உலர்த்துவது எல்லாம் அவனே. நிஷா சமையல் செய்யவே அலுத்துக் கொள்வாள். இத்தனைக்கும் காய் இவன் தான் அரிந்து தருவான்.

ஆனால் அப்படியே வாசல் வரை பெருக்கிட்டா போச்சு. பத்து குடித்தனக்காரர்கள் இருக்கும் வீட்டில் கூப்பாடு போடுவாள். நீ என்ன முறைவாசல் செய்யறியான்னு. கேட்டு கேட்டு இவள் இப்படித் தான். பாவம் ராஜமாணிக்கம் என தொச்சு தொச்சுன்னு போய் விடுவார்கள் அக்கம் பக்கத்தினர். இவனுக்குத் தான் நாக்கை பிடுங்கிக்கலாமான்னு இருக்கும்.
ஓரிருமுறை அப்படியே எங்காவது ஓடி விடலாமான்னு நினைத்து இருக்கிறான். முடிய வில்லை.

குடும்பம் கோவிலாவது பெண்களின் கையில் தான் இருக்கிறது. அனுசரணை இருவருக்கும் வேண்டும். ஆண்பிள்ளை அடிபணிந்து போகிறான். பெண் அகமகிழ்ந்து விரட்டுகிறாள். பின் பிள்ளைகள் எப்படி தந்தையை மதிக்கும்?

குழம்பிய படி கிடந்தான் ராஜமாணிக்கம். மனசு அங்கும் இங்கும் குதியாட்டம் போட்டது. நிஷா நல்லவளாய் இருந்திருந்தால் குழந்தைகளும் நன்றாய் பேசுவார்கள். இவர்கள் இப்படித் தான். மாற்ற முடியாது. ஏன் என் மனசுக்குள் நான் இவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அவ்வாறு நினைத்து வாழ்ந்து கொண்டால் போயிற்று. அவன் மன நிஷா ஆதரவாக காலை பிடித்தவாறு..

என்னங்க! ஆபிஸில் ரொம்ப வேலையா? டயர்டா தெரியறீங்களே! இந்த காபியை குடிச்சுட்டு படுத்துக்கோங்க.

ஒயிலாய் நடந்து காபி கொடுத்து மின்விசிறியை தட்டிவிட்ட மனைவி புதிதாகத் தெரிந்தாள்.

பார்வை திரும்பியதில் பாசமாய் குழந்தைகளும்..

ஹே! அப்பா வந்தாச்சு! கிரிக்கெட் பேட் இன்னிக்கு வாங்கிட்டு வரலையா? பரவாயில்ல இந்த மாசத்துக்குள்ள வாங்கித் தாங்க என்ற விஸ்வாவும் புதிதாகத் தெரிந்தான்.

அப்பா! அப்பா! நல்ல அப்பா !சமத்து அப்பா! ஆசை அப்பா என்று கொஞ்சும் வித்யாவும் புதிதாகத் தெரிந்தாள்.

இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சலனப்பட்ட மனம் பிறழ ஆரம்பித்தது.

என்ன ஆச்சு இவருக்கு வந்ததிலே இருந்து நானும் கத்திக்கிட்டே இருக்கேன். மனுஷன் பேயடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கார். வீட்டு வேலைகள் எல்லாம் அப்படியே கிடக்கு. புள்ளைகளையாவது பார்த்துக்கலாம்..பாடம் சொல்லிக் கொடுக்கலாம். இப்படி மண்ணு மாதிரி உட்கார்ந்திருக்கியே, ஏய்! எழுந்திருன்னு சொன்ன நிஷா அவர் கண்ணுக்கு மின்விசிறி போட்டு காபி கையில் கொடுப்பவளாக இருந்தாள்.

ராஜமாணிக்கம் மனதுக்குள் வேறு நிஷா, வேறு விஸ்வா, வேறு வித்யா.

ஆம்! துறவறம் பெற்றான் மனதில்.

No comments:

Post a Comment